
Oyyari
காற்றிலே மிதந்து வரும் கானம்போல் இனிமையாக இருந்தது அவள் வருகை. அழகிய ஆடையின் தலைப்பு பின்னாலே பறந்தாட, கண்கள் அப்படியும் இப்படியும் சுழன்றாட, காதுகளில் லோலக்குகள் அசைந்தாட அவள் அடி எடுத்து வைத்தது பார்ப்பவர் மனதைத் திண்டாடத் தூண்டியது. எழிலுக்கு எழிலூட்டும் "ஸேரி" யின் முன் கொசுவம் புரண்டு அசைந்து அவளது அழகிய பாதங்களைத் தொட்டுத் தடவித் துவண்டு, அவளது அழகு நடையால் அங்குமிங்கும் அலைபாய்ந்த வசீகரம் அவளைக் கண்டு நின்றவர்களின் உள்ளத்தில் எவ்வளவோ எண்ண அலைகளை எழுப்பின.
தனது அழகை அவள் உணர்ந்து, தன் எழில் மற்றவர்களை என்ன பாடு படுத்துகிறது என்பதை நன்கு உணர்ந்து, ஒயிலாக நடந்துகொண்டிருந்தாள். அவளது கறுமணிக் கண்கள் பாதையோரங்களில் இருந்தவர்களது தன்மையை விழுங்கப் பாயும். ஆள்விட்டு ஆள் தாவித் துள்ளும். ஆடம்பரக்காரன் எவன் மீதாவது படியும். செல்லப்பிள்ளை ஒருவனை வசியம் செய்யும் வலையெனப் பார்வை பரப்பி மீளும்.
அவள் இன்பக் கவிதை. சிங்காரியான அவளுக்கு எப்படி மினுக்கிக் குலுக்கி காந்தமாய்த் திகழ வேண்டும் எனும் ஈலை நன்கு கைவந்திருந்தது. அந்த வீதியில் தினந்தோறும் மாலை வேளையில் அவள் தனக்குத்தானே விளம்பரமாகத் தளுக்கித் திரிந்தாள்.
வழியோடு போகிறவர்கள் யாராக இருந்தாலும் சரி, அவளை ஒரு தரமாவது பாராமல் போக முடியாது. அவள் வனப்பை ஒரு முறை ரசித்த கண்கள் மீண்டும் மீண்டும் அவளைச் சுற்றி வளைய வரத் தவறாது. வீட்டு ஜன்னலின் பின் நின்றும், மாடியிலிருந்தும், உலாவி வருகின்ற உல்லாசக்காரியைக் கண்டு களிக்கக் காத்திருப்பவர்களுக்கு குறைவே கிடையாது. அவள் பலரது பார்வைக்கு விருந்து. எண்ணற்றோரின் பேச்சுக்குப் பொருள். சிலரது ஏக்கத்துக்கு ஒரு தூண்டுகோல்.
- ISBN
- 9788199736139
- Språk
- Tamil
- Vekt
- 86 gram
- Utgivelsesdato
- 1.1.2026
- Forlag
- Nilan Publishers
- Antall sider
- 56
