
Oli Valar Vilakku
அருளநுபவம் பெற்றவர்களுடைய வாக்குக்கும் புலமை யாற்றலால் பாடுவோர் வாக்குக்கும் வேறுபாடு உண்டு. இறைவனுடைய அருளினால் விளைந்த இன்பத்தை நினைக்கும் போது அன்பர்களுக்கு வியப்பும் பெருமிதமும் கொந்தளிக்கின்றன. அப்போது பாட்டு எழுகிறது. பக்தி உணர்ச்சி மிகுதியாக இருந்தால் சொல்லுகிற விஷயம் அடைவாக இராது. காரண காரியத் தொடர்பு காண்பது அரிது. ஒரே அநுபவ அதிசயமாக இருக்கும். ஆயினும் அதனூடே அருளின் இழை ஓடும். அநுபவம் சுருதி போடும். புலமை மிக்கவர் வாக்கிலே பூத்தொடுத்தாற் போன்ற தொடர்பு இருக்கலாம். இலக்கண ஒழுங்கு பிறழாத அமைதி இருக்கலாம். கற்பனை வளம் இருக்கலாம்.
ஆனால் அநுபவ முதிர்ச்சியினால் அமையும் ஒளியை அவற்றில் இத்தனை சிறப்பாகக் காண இயலாது. அவற்றைப் படிக்கும்போது இலக்கிய இன்பத்தை நுகர்கிறோம். இவற்றைப் படிக்கும்போதோ அருளநுபவச் சோலையின் நிழலிலே உள்ளமும் உயிரும் குளிர்வதுபோன்ற உணர்ச்சி உண்டாகிறது. பாட்டைப் படித்த பிறகு பாடியவரை நினைக்கச் செய்யும் பாடல்கள் அவை. இப்பாடல்களிலோ பாட்டின் பொருளாகிய ஒன்றில் புகுகிறோம். நமக்குத் தெளிவு படாமல் இருந்தாலும் இன்னதென்று சொல்ல இயலாத ஒருவகைப் பிரமை உண்டாகிறது. சிறிதே பக்தியுணர்வும் கலந்துவிட்டால் இன்ப அநுபவத்தின் லேசம் எங்கோ தொலை தூரத்தில் கண் சிமிட்டுவது போல இருப்பதைக் காணலாம்.
இந்த நாட்டுப் பக்திப் பாடல்களின் சிறப்பு இது. தமிழர்கள் மிகவும் கொடுத்துவைத்தவர்கள். உள்ளத்தைக் கனியவைக்கும் இத்தகைய பாடல்களை அவர்கள் பெற்றது போல் வேறு யார் பெற்றிருக்கிறார்கள்?
- Forfatter
- Ki Va Jagannathan
- ISBN
- 9788199925311
- Språk
- Tamil
- Vekt
- 141 gram
- Utgivelsesdato
- 6.3.2026
- Forlag
- Nilan Publishers
- Antall sider
- 98
